சென்னை சில்க்ஸ் உள்ளே உள்ள தங்கம் என்ன ஆகியிருக்கும்? ஒரு திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

இன்று அதிகாலை சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து சென்னை நகரையே உலுக்கியுள்ளது. கட்டிடத்தின் ஒரு பகுதி தற்போது இடிந்து விழுந்துவிட்ட நிலையில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை சில்க்ஸ் கடையில் உள்ள அனைத்து மாடிகளிலும் உள்ள துணிகளும் சாம்பலாகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த கடையின் உள்ளேயே ஸ்ரீகுமரன் தங்க மாளிகை என்ற நகைக்கடையில் உள்ள தங்கம் என்னவாகியிருக்கும் என்பதே பலரது கேள்வியாக உள்ளது. நகைக்கடையில் உள்ள தங்கம் முழுவதும் உருகி இருக்கும் என்றும், ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேல் நகைகள் சாம்பலாகியிருக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால் போலீஸ் தரப்புக்கு சற்று முன்னர் குமரன் நகைக்கடையில் உள்ள நகைகள் குறித்து ஒரு செய்தி வெளிவந்துள்ளது. குமரன் நகை மாளிகை மட்டுமின்றி பொதுவாக அனைத்து நகைக் கடைகளிலும் ஸ்டாக் தங்கத்தை ஒரு பெரிய இரும்புப்பெட்டியில் இரவு கடையை மூடும்போது அதில் வைத்து பூட்டி விடுவார்களாம். இதுபோன்ற தீ விபத்து மற்றும் திருடர்களிடம் இருந்து தங்கத்தை பாதுகாப்பதற்கும் இந்த ஏற்பாட்டை வழக்கமாக செய்வதுண்டு.

எனவே இந்த தீவிபத்தால் இரும்புப்பெட்டியும் அதில் உள்ள தங்கமும் உருக வாய்ப்பு இல்லை என்றும், அப்படியே தீயின் வெப்பத்தால் இரும்புப்பெட்டியில் உள்ள தங்கங்கள் உருகினாலும் அந்த தங்கம் இரும்புப்பெட்டியின் உள்ளே பத்திரமாக இருக்கும் என்றும் அதனால் தங்கத்தை பொருத்தவரையில் கடை உரிமையாளருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கண்ணாடி ஷோகேஷில் வைத்திருந்த நகைகள் சேதம் அடைந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கட்டிடம் மற்றும் கட்டிடத்தில் உள்ள பொருட்கள் அனைத்திற்கும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் நிறுவனம் அனைத்து நஷ்டத்தையும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.