கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி வாங்க வாலிபர் செய்த திருட்டு: சிசிடிவியால் சிக்கியதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் வாங்குவதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்ட சென்னை வாலிபர் ஒருவர் சிசிடிவி வீடியோவால் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா சாலையை ஒட்டிய பீட்டர்ஸ் சாலை என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடிக்கடி நகைகள் உள்ளிட்ட பொருள்கள் திருடு போனதாக அண்ணாசாலை காவல் நிலைய போலீசாருக்கு புகார் வந்தது. சமீபத்தில் கூட அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 சவரன் நகை நகை திருடு போனது.

இதனை அடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகப்படும் நபரொருவரை கண்டுபிடித்தனர். அந்த நபர் திருவல்லிக்கேணியை சேர்ந்த 32 வயது மேகநாதன் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேகநாதனை பிடித்து வந்து போலீசார் விசாரணை செய்ததில் முதலில் திருடியதை மறுத்த மேகநாதன் அதன்பின்னர் போலீசாரின் ‘கவனிப்பு’க்கு திருட்டை ஒப்புக்கொண்டார். ஊரடங்கு நேரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் ஆகியவற்றை வாங்கிக் கொடுப்பதற்காக திருடியதாகவும், திருடிய நகைகளை தி நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்று அதில் கிடைத்த பணத்தில் கள்ளக்காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் நகைகளை வாங்கிக் கொடுத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து மேகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேகநாதனிடம் திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடைக்காரரிடமும் விசாரணை நடந்து வருகிறது.