close
Choose your channels

76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா???

Tuesday, November 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா???

 

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக 76 ஆண்டுகளுக்கு புதிய நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 65 மில்லியன் லிட்டர் நீர் சென்னை மக்களுக்கு கிடைக்கும் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுவரை சென்னை மாநகரின் குடிநீர் தாகத்தை திருவள்ளூரில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரவாக்கம் எனும் 4 ஏரிகள் மட்டுமே தீர்த்து வந்தன. மேலும் கடலூரின் வீராணம் ஏரியும் சென்னையின் பெரும்பலான நீர்த் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வாய்க் கண்டிகை எனும் புதிய நீர்த்தேக்கம் சென்னை மக்களின் பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய்க் கண்டிகை கிராமங்களில் இருக்கும் பழைய 2 எரிகளை இணைத்து புதிதாக ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அணைக்கான அடிக்கல் கடந்த 2013 ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, 380 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. 1,485 ஏக்கர் பரபரப்பளவில் உள்ள இந்நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் கண்டலேறு –பூண்டி கால்வாய் பகுதியில் இருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்பு உருவாக்கி அதன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட இருக்கிறது.

இதனால் சென்னையின் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு புதிதாக தினமும் 65 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படும். மேலும் நீர்த்தேக்க சுற்றுப் பகுதிகளில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்களும் இப்புதிய நீர்த்தேக்கத்தினால் பயனடைய முடியும். இந்நீர்த் தேக்கத்தில் 5 புதிய மதகுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

முன்னதாக சென்னையின் தண்ணீர் தேவைக்காக கடந்த 1944 ஆம் ஆண்டு பூண்டியில் உள்ள சத்யமூர்த்தி நீர் தேக்கம் உருவாக்கப்பட்டது. தற்போது 76 ஆண்டுகள் கழித்து தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் நீரளவை நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் இருந்து பார்த்து ரசிப்பதற்கு வசதியாக வியூ பாயின்ட் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. நீர் ஓட்டத்தை கணிப்பதற்கு வசதியாக அருகிலேயே 1,000 சதுர அடியில் ஆய்வு மாளிகை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. மேலும் பொறியாளர்கள் தங்குவதற்கு வசதியாக அறைகளும் உருவாகக்ப்பட்டு உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.