சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் தினம் அனுசரிப்பு!!! நாடுமுழுவதும் மௌன அஞ்சலி செலுத்திய மக்கள்!!!

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

 

கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவிய முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்று தொடங்கிய கொரோனாவின் தாக்கம் ஏறக்குறைய உலக நாடுகளில் அனைத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் பரவிய சீனாவில் தற்போது இயல்பு நிலைமை திரும்பியிருக்கிறது. அங்கு கடந்த வாரம் முதல் அனைத்து கடைகள் மற்றும் மால்கள் போன்றவை திறக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

சீன அரசாங்கம் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் அனுசரிப்பு தினமாக ஏப்ரல் 4 ஆம் தேதியை அறிவித்து இருந்தது. அதன்படி அந்நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. நாடுமுழுவதும் மக்கள் சரியாக 10 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதற்காக போக்குவரத்து, ரயில் போன்ற சேவைகள் நிறுத்தப்பட்டு மக்கள் சாலைகளில் இருந்தபடியே தங்களது அனுதாபத்தை தெரிவித்தனர்.

இதுவரை சீனாவில் கொரோனா பாதிப்பினால் 3300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர். 10 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களும் தங்களது இன்னுயிரை கொரோனா சிகிச்சையின் போது தியாகம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 4 ஆம் தேதி சீனாவில் அனுசரிப்பு தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அயல்நாடுகளிலும் உள்ள சீன தூதரகங்களில் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90 சதவீதம் பேர் அந்நோயில் இருந்து மீண்டு இருப்பதாகவும் சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.