தற்கொலைக்கு முன் சித்ராவிடம் பலமணி நேரம் பேசிய நபர்: ஆடியோ ஆதாரங்கள் மீட்பு

  • IndiaGlitz, [Wednesday,December 16 2020]

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தனியார் விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்ரா தற்கொலை குறித்து கடந்த 5 நாட்களாக விசாரணை செய்து வந்த காவல் துறையினர், சித்ராவின் கணவர் ஹேமந்தை தீவிர விசாரணை செய்த பின்னர் கைது செய்தனர்.  

ஹேமந்த் கொடுத்த அழுத்தம் காரணமாகவே சித்ராவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தற்கொலைக்கு முன் சித்ரா தனது மாமனாரிடம் பல மணி நேரம் மொபைல் போனில் பேசியதாக தெரிகிறது.  சித்ராவின் தொலைபேசி உரையாடல் அனைத்தும் அழிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் கிடைத்த ஆடியோ தகவலின்படி சித்ரா தனது மாமனாரிடம் கணவர் குறித்து குற்றச்சாட்டு கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் மேலும் தீவிரமாக விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதால் இன்னும் ஒருசில கைது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சித்ராவின் மாமனார் செய்தியாளர்களிடம் பேசியபோது ’அவசரகதியாக தனது மகன் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் யாரையோ காப்பாற்ற இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், சித்ராவுக்கு வரதட்சணை கொடுமை எதுவும் தாங்கள் கொடுக்கவில்லை என்பது அவர்களது குடும்பத்திற்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.