கோவை மாவட்டமே எங்களுக்காக குவிந்துள்ளது...! பிரச்சாரத்தில் தட்டித்தூக்கும் எடப்பாடியார்...!

திமுக அமைச்சர்களின் மீதுள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், அதை மறைக்கவே ஸ்டாலின் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் முதல்வர். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் திமுக-தான் வெற்றிபெறும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். ஸ்டாலின் அவர்களே, இங்கு பாருங்கள், எங்கள் கட்சிக்காக கோவை மாவட்டமே இங்கு வந்து குவிந்துள்ளது. கடந்த முறை ஒரு தொகுதியைத்தான் கோவையில் இழந்தோம், இம்முறை வெற்றிவாய்ப்பு 100% பிரகாசமாக உள்ளது.

நீங்கள் எப்படிப்பட்ட அவதாரங்கள் எடுத்தாலும் வெற்றிவாய்ப்பு உங்களுக்கு இல்லை. வலிமையான கூட்டணி, வெற்றி கூட்டணியாக திகழும் அதிமுக தான் வெற்றிபெறும். இதற்கு காரணம் எங்கள் கூட்டணி தான் மக்களுக்கு நன்மை செய்யும். பிரதமர் மோடியும், நாட்டை வல்லரசாக மாற்ற உழைத்துக்கொண்டிருக்கிறார். இந்த தேசம் வலிமையாக மாற வேண்டும் என்ற நோக்கில் சேர்க்கப்பட்ட கூட்டணி தான் அதிமுக-பாஜககூட்டணி.

திமுகவில் உள்ள 13 முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நடந்துவருகிறது. அதை மறைக்க ஸ்டாலின் எங்கள் கூட்டணி கட்சியின் மீது குற்றம் சாட்டுகிறார் என்றும் பழனிச்சாமி அவர்கள் உரையாற்றினார்.