ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காமெடி நடிகரின் மகன்: முதல் முயற்சியிலேயே தேர்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

பொதுவாக சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெற்று வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக வெளி வந்திருக்கும் செய்தியை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருஜன் ஜெய், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. அது மட்டுமன்றி இந்திய அளவில் 75 ரேங்கில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் ஐஏஎஸ் தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் சின்னி ஜெயந்த் மகன் முற்றிலும் வித்தியாசமாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, சிவில் சர்வீஸ் தேர்வின் பயிற்சி ஆகிய அனைத்தையும் சென்னையிலேயே ஸ்ருஜன் ஜெய் முடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

இதுகுறித்து ஸ்ருஜன் ஜெய் கூறியபோது, ‘ஐ,ஏ.எஸ் கனவு என்பது சின்ன வயசுல இருந்தே என்னுடைய விருப்பமா இருந்தது. அப்பா அம்மா ரெண்டு பேரும் என்னை ரொம்ப ஊக்குவிச்சாங்க, அப்பா சினிமாவுல இருந்தாலும் எப்பவுமே என்னை சினிமாவுக்கு வரணும்னு கட்டாயப்படுத்தினதில்ல. ஆனா நானும், என் தம்பியும் நல்லா டான்ஸ் ஆடுவோம், சண்டை போடுவோம், பல நாடகத்துல நடிச்சிருக்கோம். ஆனால் சினிமா மேல ஆசை வரல... அரசு அதிகாரியாக வரணும் அப்படிங்கறது என்னோட நீண்டநாள் ஆசை. அதுக்காக நிறைய படிச்சேன், அதிக நேரம் ஒதுக்கினேன், இதுக்கு அப்பாவும் அம்மாவும் ரொம்ப துணையாக இருந்தாங்க... அந்த ஒரு சப்போர்ட்தான் இந்த வெற்றியை எனக்கு கொடுத்துருக்கு...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு., 75ஆவது ரேங்க் வாங்கினதால நிச்சயமா தமிழ்நாட்டில்தான் எனக்கு போஸ்டிங் கிடைக்கும். கல்வி, தொழில் வளர்ச்சி, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்துவதே என்னுடைய நோக்கமா இருக்கும். இதுவரைக்கும் வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லைக் கோடும் போடாம உன்னோட வாழ்க்கையை நீயே தீர்மானிச்சுக்க என்று சொன்ன அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப நன்றி! என்று கூறினார்