கொரோனா மருந்து: நாங்க அப்படி சொல்லவே இல்லையே… பல்டி அடித்த பதஞ்சலி நிறுவனம்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 01 2020]

 

7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்றை குணமாக்கும் ஆயுர்வேத மருந்து கிட்டை பதஞ்சலி நிறுவனம் கடந்த ஜுன் 23 ஆம் தேதி வெளியிட்டது. பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட ஆயுர்வேத மருந்தை பயன்படுத்தினால் 100 சதவீதம் முழுமையாக குணம் பெறமுடியும் என பாபா ராம்தேவ் அதன் வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருந்தார். மேலும், NIMS பல்கலைக் கழகமும் பதஞ்சலி ஆராய்ச்சி மையமும் இணைந்து இந்த ஆயுர்வேத மருந்தை தயாரித்து உள்ளதாகக் கூறப்பட்டது. டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் பல நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்ததாகவும் பாபா ராம்தேவ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன்படி 280 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் 100 விழுக்காடு முழுமையான சிகிச்சையைக் கொடுக்க முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

NIMS பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆயுர்வேதிக் மருந்து சிகிச்சையில் 7 நாட்களில் முழுமையான சிகிச்சையை பெற முடிந்ததாகவும் கூறப்பட்டது. இந்தப் பல்கலைக் கழகம் 95 கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் முதல் மூன்று நாட்கள் 69 சதவீதம் குணமடைந்ததாகவும் அடுத்த 4 நாட்களில் முழுமையான குணத்தை பெறமுடிந்ததாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்த செய்தியை NDTV செய்தியாக வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் பதஞ்சலி நிறுவனத்தின் புதிய ஆய்ர்வேத மருந்து குறித்த எந்த தகவலும் எங்களிடம் இல்லை எனக் கூறியிருந்தது. இதனால் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. புதிய ஆயுர்வேத மருந்து விற்பனைக்கு விளம்பரம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்தது. இப்படி சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் “எங்கள் மருந்துகள் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஒருபோதும் நாங்கள் கூறியதில்லை” என யோக குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்து உள்ளார்.

கொரோனில் ஆயுர்வேத மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் மருந்துகளை தயாரித்து உள்ளோம். அவற்றை கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் மருத்துவ கட்டுப்பாட்டு சோதனையில் பயன்படுத்தி பார்த்தோம். அது கொரோனா நோயாளிகளை குணப்படுத்தியது என்றே தெரிவித்தோம். அதில் எந்த குழப்பமும் இல்லை என்று ஆச்சார்யா பாலகிருஷ்ணா தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். இதனால் இந்திய மருந்து குழுக்களின் மத்தியில் தற்போது கடும் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது.

முன்னதாக ஆயுஷ் அமைச்சகம் மருந்துகளின் கலவை, ஆராய்ச்சி முடிவுகள், ஆராய்ச்சி நடத்தப்பட்ட மருத்துவ மனைகளின் விவரம், நெறிமுறைகளைப் பின்பற்றி மருந்து சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதா? மருத்துவ சோதனைக்கு பதிவு செய்யப்பட்டதா? என்பதைக் குறித்து பல்வேறு விவரங்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. மேலும் பதஞ்சலி நிறுவனம் உத்தரகாண்ட் மருந்து கழகத்திடம் உரிமை பெற்றிருந்ததா எனவும் கேள்வி எழுப்பப் பட்டது.

அந்தக் கேள்விக்கு “நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை குணப்படுத்தவே உரிமம் கோரியதாகவும் அந்த தயாரிப்புகளை கொரோனா தடுப்பு மருந்துகளின் ஒரு பகுதி என்பதை அந்நிறுவனம் ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை” என்றும் தற்போது விசாரணையில் முடிவு வெளியாகி இருக்கிறது. எனவே மாநில அரசின் சார்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த பதஞ்சலி நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்துகள் எதுவும் தங்களால் தொகுக்கப் படவில்லை என பதில் அளித்து இருக்கிறது. ஆனால் கொரோனில் மற்றும் மற்ற இரு மருந்துகளின் பாட்டில்களில் கொரோனா வைரஸ் படத்தை பயன்படுத்தினோம் எனவும் கூறியிருக்கின்றனர். இதனால் பதஞ்சலி நிறுவனத்தின் புதிய மருந்துகளை, மருந்துக் கழகம் சோதனைக்கு எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியானது.

முன்னதாக மருந்து வெளியீட்டு விழாவில் பேசிய பாபா ராம்தேவ் ஜெய்ப்பூரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தேசிய மருத்துவ அறிவியல் நிறுவன பல்கலைக் கழகத்துடன் இணைந்து புதிய ஆயுர்வதே மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அதில் 100 சதவீதம் முழுமையான குணம் பெற முடிந்தது. மேலும் டெல்லி அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனில், ஸ்வாசரி மருந்துகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்து இருந்தார். கொரோனா நோயாளிகளிடம் சோதனை செய்து பார்க்க உரிமம் பெறப்பட்டதா என்பதைக் குறித்து தற்போது பெரும் குழப்பம் வெடித்து இருக்கிறது. பதஞ்சலி நிறுவனத்தின் மீது முறையான விசாரணை தொடங்கப்படவே இல்லை, மற்றவர்களிடம் நெருக்கடி காட்டும் அரசு பதஞ்சலி நிறுவனத்திடம் முறையான விசாரணை மேற்கொள்ள மறுக்கிறதா? என்கிற ரீதியிலும் தற்போது விமர்சனங்கள் வைக்கப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.