நகைச்சுவை பிரபலம் நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நகைச்சுவை பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் செந்தில். அதுவும் கவுண்டமணியுடன் இவரது நகைச்சுவை கூட்டணியை விரும்பாத ரசிகர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு கடந்த 80, 90 களில் இருவரும் கொடிகட்டி பறந்தனர். இந்நிலையில் நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் கடந்த சில தினங்களாக சென்னையை ஒட்டிய காட்டான்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து நடிகர் செந்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானவுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் நடிகர் செந்தில் இன்னும் 3 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக நட்சத்திரப் பேச்சாளராக இருந்த இவர் தற்போதைய தேர்தலை ஒட்டி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக-பாஜக கூட்டணி சார்பாக தீவிரத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். தற்போது வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிச்செய்யப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.