விருந்தில் கலந்துகொண்ட புலியால் அதிரும் சோஷியல் மீடியா!

  • IndiaGlitz, [Wednesday,October 13 2021]

துபாயில் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என உறவினர்களுக்கு அறிவிக்கும் விழாவினை ஒரு தம்பதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் உண்மையான புலி கலந்துகொண்டு பலூனை தட்டிவிட்டு குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

இந்தியாவில் குழந்தைப் பிறப்பின்போது ஆணா? பெண்ணா? என்ற பாகுபாடு இன்றைக்கு வரைக்கும் நீடிக்கத்தான் செய்கிறது. ஆனால் சில வெளிநாடுகளில் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? எனத் தெரிந்து கொள்வதற்குப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் செய்தியை தங்களது உறவினர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு தம்பதியினர் விருந்து வைத்து கொண்டாடவும் செய்கின்றனர்.

அந்த வகையில் துபாயிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், அதே ஹோட்டலில் பராமரிக்கப்படும் புலியும் கலந்து கொண்டது. மேலும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கும் பொருட்டு அந்த விழாவில் பறக்கவிடப்பட்ட பலூனையும் அந்த புலி எட்டிப்பிடித்து உடைத்தது. இதனால் விழாவில் கலந்து கொண்ட அனைவரும், உற்சாகமாகக் காட்சியளித்த புலியைப் பார்த்து பிரமித்து போயினர்.

இந்நிலையில் விருந்து நிகழ்ச்சியில் புலி கலந்துகொண்ட வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் புலியை வைத்து விருந்து நிகழ்ச்சி நடத்துவதா என்று சமூகநல ஆர்வலர்கள் சிலர் கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.