ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான் போட்டி

வெற்றிப் பயணத்தைத் தொடருமா சென்னை?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய நான்காவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் தோனி தலைமையிலான சென்னை அணி தன் வெற்றி நடையைத் தொடரும் என நம்பப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் யுஏஇயில் நடக்கிறது. இதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில் ஷார்ஜாவில் நடக்கவுள்ள தனது இரண்டாவது லீக் போட்டியில் சென்னை அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியை பொறுத்தவரையில் வெற்றி உற்சாகத்தில் களமிறங்குகிறது. ஆனால் ராஜஸ்தான் அணி, பல சிக்கல்களுக்கு இடையே களமிறங்கவுள்ளது.

சிக்கலும் ஆறுதலும்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பாதியில் அந்த அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்பது கவலையளிக்கும் விஷயம் தான். அதேபோல மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் 36 மணிநேரக் கட்டாயத் தனிமைப்படுத்தலில் உள்ளதால் சென்னைக்கு எதிரான போட்டியில் இவராலும் களமிறங்க முடியாது. அதேநேரம் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேறபார் என்பதுதான் ராஜஸ்தான் அணிக்கு ஒரே ஆறுதலான விஷயம். இதுபோன்ற விஷயங்கள் அனைத்தும் இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஆண்ட்ரூ டை ஆகியோர் நிச்சயமாக சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் ராஜஸ்தான் அணியில் சிறந்த வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும் இந்திய வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் பார்மில் இல்லை. சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனத்கத்,வருண் ஆரோன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் மீதுள்ள நம்பிக்கைக்கு ஏற்ற அளவில் செயல்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஜாய்ஸ்வால் எதிர்பார்ப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த ஆண்டு புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட யஷஸ்வி ஜாய்ஸ்வால். 19 வயதுக்கு உட்படோருக்கான கிரிக்கெட்டில் அசத்திய ஜாய்ஸ்வால், சீனியர்
பட்டாளம் நிறைந்த சிஎஸ்கேவிற்கு எதிராகச் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சொதப்பல் துவக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்குத் தேவையான துவக்கம் கிடைக்கவில்லை. முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோர் இம்முறை சிறப்பான துவக்கம் அளித்தால் நல்லது. தொடர்ந்து ராயுடு, டூபிளஸி நல்ல ஃபார்மில் இருப்பது கூடுதல் பலம். ஆல் ரவுண்டர் சாம் கரன் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டதால் டுவைன் பிராவோவிற்கு வாய்ப்பு கிடைப்பது மேலும் தள்ளிப்போகலாம்.

சகார் சந்தேகம்

மும்பைக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் சென்னை வீரர் தீபக் சகார் காயத்தால் சற்றுத் திணறியதைஜ் காண முடிந்தது. ஒருவேளை இவரால் இப்போட்டியில் களமிறங்க முடியவில்லை என்றால் சார்துல் தாகூருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

எதிர்பார்க்கப்படும் லெவன் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், முரளி விஜய், ஃபாப் டூபிளஸி, அம்பத்தி ராயுடு, தோனி (கே), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ப்யூஷ் சாவ்லா, தீபக் சகார், லுங்கி நிகிடி.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ராபின் உத்தப்பா, யஷஸ்வி ஜாய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் (கே), டேவிட் மில்லர், ரியான் பராக், ஷ்ரேயஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாத்கட், வருண் ஆரோன், டாம்
கரன்.