close
Choose your channels

தப்பு செஞ்சா கை, கால்களை வெட்டுவோம்… புது அரசாங்கத்தால் மக்கள் கலக்கம்!

Saturday, September 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் பழையபடி தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்காலிகமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் அவர்கள் முழுமையான ஆட்சிப்பொறுப்பிற்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில் “பொதுமக்கள் தவறு செய்தால் கை, கால்களை வெட்டும் தண்டனை வழங்கப்படும்“ என்று தாலிபான்கள் அமைப்பின் தலைவர் முல்லா நூடுதீன் துராபி தெரிவித்து இருப்பது பொதுமக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டும், குரானின் அடிப்படயிலும் தண்டனைகள் வழங்குகிறோம் எனச் சொல்லிக்கொள்ளும் தாலிபான்கள் கடந்த காலங்களில் நடுரோட்டில் வைத்து குற்றவாளிகளை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதுவும் குற்றவாளியின் சொந்த குடும்பத்தினரால் நிறைவேற்றப்படும் இந்தத் தண்டனைக்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு இருந்துவந்தது.

அதேபோல பாதிக்கப்பட்ட குடும்பம் குற்றவாளியிடம் இருந்து “பிளட் மணி” எனப்படும் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக்கொண்டு தண்டனை வழங்காமலும் விட்டுவிடலாம். இதுபோன்ற கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த அவர்கள் சாதாரண திருட்டுக்குக்கூட கைகளை வெட்டுவதும், கால்களை வெட்டுவதும் என பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனர்.

தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் திருட்டுச் செயல்கள் மலிந்துள்ளது. அதனால் திருட்டில் ஈடுபடும் நபர்களுக்கு கைகள் வெட்டப்படும் என்றும் நெடுஞ்சாலைகளில் திருட்டுச் செயலில் ஈடுபட்டால் கால்கள் வெட்டப்படும் என்றும் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே இருபாலினக் கல்வியை மறுத்து, பெண்களின் அரசியல் தலையீட்டை மறுத்து, நாடாளுமன்றத்தில் பெண்கள்நல அமைப்பையே காலிசெய்துவிட்ட அவர்கள் தற்போது தவறுகளுக்கு தண்டனை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.

மேலும் தாலிபான் அமைப்பை நிறுவியவர்களுள் ஒருவரான முல்லா நூருதீன் துராபி “நாங்கள் யாருடைய சட்டங்களையும் தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் தண்டனை முறை அமைதியையும் நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டத்திட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது. மேலும் எங்கள் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை“ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.