அப்பா பாணியில் அரசியலில் தடம் பதிக்கிறாரா விஜய் வசந்த்???

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

 

கன்னியாக்குமரி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அத்தொகுதிக்கான எம்.பி சீட் தற்போது காலியாகி இருக்கிறது. எனவே அதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதனால் கன்னியாக்குமரி தொகுதியில் அடுத்து காங்கிரஸ் சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சீட்டுக்கான எதிர்ப்பார்ப்பில் தற்போது பல காங்கிரஸ் பிரமுகர்கள் செயல்பட்டு வருகின்றனர். முக்கியமாக விளவங்காடு எம்.எல்.ஏ வாக இருக்கும் விஜயதாரணி, குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ களாக இருக்கும் பிரின்ஸ், மற்றும் ராஜேஸ் குமார் ஆகிய இருவரும் எதிர்பார்ப்போடு செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது வருகிற தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் நான் கான்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவேன் எனத் தெரிவித்து அப்பகுதியில் அரசியல் பணி ஆற்றி வருகிறார் விஜய் வசந்த். இதற்கு முன்னதாக நாகர் கோவில் பகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்வதற்கு வசந்தகுமார் அவர்கள் முகாம் அமைத்து இருந்தார். எம்பிகளுக்கான ஒதுக்கீடு பணம் கிடைக்காத சமயத்திலும் பலருக்கு இவர் தனது சொந்த பணத்தைக் கொண்டு நலத்திட்ட உதவிகளை புரிந்து வந்தார்.

மேலும் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் தனது சொந்த பணத்தைக் கொண்டு குடிநீர் வசதி செய்து கொடுத்து இருக்கிறார். முன்னதாக நாங்குநேரி தொகுதியில் எம்.எல்ஏ வாக செயல்பட்டபோது தனது சொந்த பணத்தை வைத்து அங்குள்ள நீராதாரங்களை வளப்படுத்தினார். தந்தை செய்துவந்த அதே நற்பணியை தற்போத விஜய் வசந்த் அவர்களும் செய்யத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் கன்னியாகுமரி தொகுதியில் தினமும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு தேவையானதை கேட்டு பணிகளை செய்வது என அரசியலில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்து விட்டார். எனவே கன்னியாகுமரி தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.