நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை. உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
- IndiaGlitz, [Friday,May 05 2017]
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 கொடூர நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் டெல்லி மற்றும் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்ற அவர் சில நாட்களில் பரிதாபமாக மரணம் அடைந்தார். இந்த வழக்கில் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தது. இவர்களில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்தது. ஆனால் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றவாளிகள் முகேஷ், பவன், அக்ஷய், வினய் சர்மா ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. 4 குற்றவாளிகளுக்கு எதிரான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் பலமாகவும், ஏற்கும்படியும் உள்ளதால் அவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.