வயதான உலக நாயகன் சாருஹாசனின் அடுத்த படம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

உலகிலேயே வயதான நாயகன் என்ற பெருமையை பெற்றவர் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ தற்போது ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் தற்போது ‘தாதா 87 2.0’ என்ற படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்திலும் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாருஹாசன்‌ நடித்து கடந்த வருடம்‌ வெளியாகி அனைவராலும்‌ பாராட்டப்பட்ட படம்‌ ’தாதா 87’. இப்படத்திற்கு விஜய்‌ ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம்‌ எழுதி இயக்கியிருந்தார்‌. லோக்கல்‌ தாதாவாக களம்‌ இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின்‌ மூலம்‌ தேசிய விருது பெற்ற நடிகர்‌ என தடம்‌ பதித்தார்‌ சாருஹாசன்‌.

நடிப்பில்‌ தன்‌ தமயன்‌ கமல்ஹாசன்‌ உலகநாயகன்‌ என பெயரிடப்பட்டிருக்கும்‌ வேளையில்‌ உலகிலேயே 87 வயதில்‌ கதாநாயகனாக நடித்து வயதில்‌ உலகநாயகன்‌ எனப்‌ பெயர்‌ பெற்றார்‌ சாருஹாசன்‌. ரஜினிகாந்த்‌ நடிப்பில்‌ வெளியான ’காலா’ படத்தின்‌ டீசர்‌ வெளியான நேரத்தில்‌ தாதா 87 பட டீசரும்‌ வெளியாகி அனைவரின்‌ பாராட்டை பெற்றதோடு உலகளவிலும்‌ ட்ரெண்டானது. இப்படத்தினை பார்த்த பலரும்‌ சாருஹாசனை மட்டுமே வைத்து ஏன்‌ ஒரு முழுநீள தாதா படமாக உருவாக்கக்‌ கூடாது என கேட்டுக்கொண்டனர்‌. இதனை மனதில்‌ வைத்து பலம்‌ என்பது உடல்‌ வலிமையை மட்டும்‌ வைத்து முடிவு செய்யப்படுவதில்லை, அது மூளையையும்‌ வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும்‌ முக்கியமல்ல சாணக்கியனாகவும்‌ இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை
மீண்டும்‌ இயக்குகிறார்‌ விஜய்‌ஸ்ரீ

உள்ளூரில்‌ சாமான்யனாக தாதாவாக இருக்கும்‌ ஒருவர்‌ தன்‌ புத்தியின்‌ பலத்தை கொண்டு உலக அரங்கில்‌ தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார்‌ என்ற பின்னணியில்‌ இப்படம்‌ உருவாகிறது. தற்போது 90 வயதிலும்‌ உலக அளவில்‌ நடிக்கிற நடிகர்‌ என்ற பெருமை பெற்ற சாருஹாசன்‌ நடிப்பில்‌ உலகநாயகன்‌ என்ற பெயர்‌ பெற்ற கமல்ஹாசன்‌ போல்‌ வயதில்‌ உலக நாயகன்‌
என இடம்பெறுகிறார்‌.

முன்னணி நடிகர்‌, நடிகையினர்‌ மற்றும்‌ மக்கள்‌ மனதில்‌ இடம்பெற்ற பழம்பெரும்‌ நடிகர்‌, நடிகையினர்‌ அனைவரும்‌ ரசிக்கும்‌ வண்ணம்‌ முக்கிய கதாபாத்திரங்களில்‌ நடிக்க உள்ளனர்‌. சாருஹாசன்‌, முக்கிய வேடத்திலும்‌ மைம்‌ கோபி மற்றும்‌ கூத்துப்பட்டறையைச்‌ சேர்ந்த பலர்‌ நடித்த முக்கிய காட்சிகள்‌ படமாக்கப்பட்டது. லாக்டவுன்‌ தடைநீக்கத்திற்கு பின்‌ அரசின்‌ கட்டுப்பாட்டுகளோடு தேவையான படக்குழுவினரோடு சென்னை, கேரளா மற்றும்‌ கோவாவில்‌ படப்பிடிப்பு நடைபெற உள்ளது. தாதா 87, பொல்லாத உலகில்‌ பயங்கர கேம்‌ படத்திற்கு பின்‌ இசையமைப்பாளர்‌ லியாண்டர்‌ லீ மார்ட்டி மூன்றாம்‌ முறையாக மீண்டும்‌ விஜய்‌ ஸ்ரீ யுடன்‌ இப்படத்தில்‌ இணைகிறார்‌. ஒளிப்பதிவை கோபி கவனிக்கிறார்‌. விரைவில்‌ இப்படத்தின்‌ டீசர்‌ வெளிவரவுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது