மகள் தயாரிப்பில் மருமகன் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

ரஜினியின் அடுத்த படத்தை ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் லைகா நிறுவனத்திற்காக ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மீண்டும் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வந்தன.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் ரஜினியின் 170வது படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ரஜினிகாந்த் தான் திரையுலகில் பெரிதும் மதிக்கும் எஸ்பி முத்துராமன், கலைஞானம் ஆகிய இருவருக்கும் ஒரு படம் நடிக்கவிருப்பதாகவும், இந்த படம் அவருடைய கடைசி படமாக இருக்கலாம் என்றும் இந்த படத்திற்கு பின் அவர் திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும் கூறப்படுகிறது.