கமல், சீமான் கட்சிகள் இருபெரும் சக்தியாக உருவெடுக்கும்: பிரபல இயக்குனர்

அதிமுக, திமுக மீது கடந்த பல ஆண்டுகளாக அதிருப்தியில் இருக்கும் தமிழக மக்களின் ஒருபிரிவினர் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுக்கட்சிகளுக்காக ஏங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வகை மக்களின் நம்பிக்கையை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. இவ்விரு கட்சிகளும் இன்னும் சில ஆண்டுகள் தமிழக அரசியலில் தாக்குப்பிடித்தால் நிச்சயம் ஒரு பெரும் சக்தியாக உருவாகும் என்றே கணிக்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த இரு கட்சிகள் குறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது: மநீம 16.5 லட்சம், நாம் தமிழர் 16.0 லட்சம் ஓட்டுக்கள் வாங்கி 32.5 லட்சம் மக்கள் தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்கள். 39 தொகுதிகளில் 27 இடங்களில் நாம்தமிழர் கட்சி மநீமவை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளது. 12 இடங்களில் மநீம அதிக வாக்குகள் பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்

திமுகவும் அதிமுகவும் மக்களுக்கான பணியாற்றுவதிலும் சிறப்பாக செயல்படாமல் முன்னர் போலவே இருந்தால் நாம் தமிழரும் மநீமவும் இருபெரும் சக்திகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருபெரும் கட்சிகளை எதிர்த்து தைரியமாக களத்தில் இறங்கி தனியே நின்று மாற்றத்திற்கு வித்திட்டவர்களை வாழ்த்துவோம்.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திமுக கூட்டணியின் 38 எம்பிக்களில் 12 பேர் போராளிகளாக சிந்தனையாளர்களாக, சமூக அக்கறையுடைவர்களாக, புதியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் செயல்படுவதை பொறுத்து திமுக கூட்டணி தன் பலத்தை இன்னும் பெருக்கிகொள்ள வாய்ப்பிருக்கிறது. பார்க்கலாம்

இவ்வாறு இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.