திருப்பூர் இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: இயக்குனர் ரவிகுமார் வேதனை!

கொரோனா குறித்து மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு இல்லை என்றும் தற்போது முதல் ஐந்து இடங்களில் கொரோனா பாதிப்பில் இருக்கும் திருப்பூர், இன்னும் முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் வேதனையுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

திருப்பூரில் பெரும்பாலோனோர் அணிந்திருப்பது ஒரே ஒரு துணியிலான பனியன் மாஸ்க். துவைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வசதியாக அந்த மாஸ்க்கை அணிகிறார்கள். ஆனால் அந்த மாஸ்க் கொரோனா வைரஸை துளியும் தடுக்காது. கொடுமை அதையும் தாடைக்கு அணிந்தபடி சுற்றுவதுதான்.

கூட்டமில்லாத ஒரு மளிகை கடையில் நிறுத்தினேன். அவ்வளவு பேரை சந்திக்கும் கடைக்காரர் தாடைக்கு மாஸ்க் அணிந்தபடி சர்வசாதாரணமாக புலங்கிக்கொண்டிருக்கிறார் “அண்ணா மூக்குக்கு போடுங்க” என்று சொன்னதும் சுரத்தையே இல்லாமல் இழுத்துவிட்டுக்கொண்டார். ஒரு அக்கா சேலை தலைப்பால் மூக்கை மூடியபடி வந்து நின்றார். சாலையில் எதிர்படும் பலரும் மாஸ்க் விஷயத்தில் ரொம்பவும் கவனக்குறைவாக இருப்பது கவலையாக இருக்கிறது.

ஒரு வைரஸுக்கு எதிரான பாதுகாப்பான தடுப்பு நடவடிக்கை எது என்பது இன்னமும் மக்களுக்கு சரிவர தெரியவில்லை. மாஸ்க் பற்றிய விழிப்புணர்வு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா பரவலில் திருப்பூர் முதல் ஐந்து இடத்திற்குள் இருக்கிறது முன்னணிக்கு வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. நிலவரம் அப்படி இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ரவிகுமார் சமீபத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானார் என்பது குறிப்பிடத்தக்கதூ.