இதை மட்டும் என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது: வெற்றிமாறன்

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசும் போது தனக்கு விருப்பமில்லாத ஒன்றை அழுத்தம் கொடுத்து என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது என்று உறுதியுடன் பேசியது திரையுலகினர் மற்றும் பத்திரிகை தணிக்கை துறையினர் உங்களை ஆச்சரியப்பட வைத்தது. அவர் இந்த விழாவில் மேலும் பேசியதாவது:

இந்த நேரத்தில் இது தேவையான படம். தமிழ் மண், தமிழ் மக்களுடைய ஒற்றுமைக்கான தேவையாகத் தான் இந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி அமைந்திருக்கிறது. வணிக ரீதியான வெற்றி என்பது பாலு மகேந்திரா சார் சொல்வது போல் விபத்துதான். அதை நாம் நிகழ்த்த முடியாது. அதுவாகவே நிகழும். நேர்த்தியாக படத்தை எடுக்க மட்டுமே நம்மால் முடியும்.

எனக்கு விருப்பமில்லாத ஒன்றை எனக்கு அழுத்தம் கொடுத்து யாராலும் என்னை செய்ய வைக்க முடியாது. இந்தப் படத்தை வெற்றியடையச் செய்ததற்கு ஊடகங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. என்னுடைய முதல் நன்றி மீடியாக்களுக்குத் தான்.

நடிகர்களிடம் கூலாக இருப்பேன். ஆனால் நான் மிகவும் கோபப்படுவேன். என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும் போதும் நான் எனது உதவியாளர்களிடம் சொல்வேன். நான் கோபப்படுவேன். அதற்குக் காரணம் உங்களுடைய தவறு அல்ல. எனக்கு ஒரு இயலாமை இருக்கும் சில வேளைகளில் அது உங்களிடம் கோபமாக வெளிப்படும். அதற்காக மன்னித்துவிடுங்கள்” என்றார்.

மேலும் பேசிய அவர், இது வரையிலான தனுஷ் கூட்டணியில் அசுரன் மிக நெருக்கமான படம் என்றும், அப்பா கதாபாத்திரம் அவ்வளவு ரசித்த பாத்திரம் என்றும், அதை உள்வாங்கி முழுமையான அர்ப்பணிப்போடு செய்து கொடுத்தாகவும் தெரிவித்தார். 

இவ்வாறு இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்தார்