50 வருடம் கழித்து, படித்த பள்ளியில் பழைய நண்பர்களை சந்தித்த ஸ்டாலின்..!

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும் தன்னுடன் பள்ளியில் படித்த பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1965 முதல் 1970 வரை 6 முதல் 11 வகுப்பு வரை சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பயின்றார் .

1970-ம் ஆண்டு சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பயின்ற மாணவர்களின் ஒன்று கூடல் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டார்.

50 ஆண்டுகள் கழித்து 11-ம் வகுப்பில் தன்னோடு பயின்ற நண்பர்களை சந்தித்து மகிழ்ந்த ஸ்டாலினுடன் வகுப்பில் அன்று பயின்றவர்கள் ஒருக்கொருவர் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். தன்னோடு பள்ளியில் பயின்று விளையாடி மகிழ்ந்த நண்பர்களை ஸ்டாலினும் அடையாளம் கண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்டாலின், தான் பயின்ற பள்ளியை சுற்றிப்பார்த்ததுடன் பயின்ற வகுப்பில் நண்பர்களுடன் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கிபோனார்.

1 மணி நேரம் தான் பயின்ற பள்ளியில் நேரத்தை தனது பள்ளி நண்பர்களுடன் செலவிட்ட ஸ்டாலின் அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.ஸ்டாலின் பள்ளியில் பயின்ற காலக்கட்டத்தில் அவரது தந்தையும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் எளிமையான, அமைதியான மாணவராக அவர் திகழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர் ஸ்டாலினுடன் பயின்ற அவரது நண்பர்கள்.

மாணவராக பள்ளியில் பயின்ற காலத்திலேயே ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்றதை நினைவுப்படுத்தும் அவரது நண்பர்கள் பள்ளியில் பயின்ற போதே அவர் அரசியல் ஆர்வத்துடன் திகழ்ந்ததாக தெரிவிக்கின்றனர்.