'கைதி' கதை சர்ச்சை குறித்து ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் அறிக்கை!

கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ படத்தின் கதை குறித்த சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் தனது டுவிட்டர் மூலம் இது குறித்து விளக்கம் அளித்தார்

இந்த நிலையில் தனது நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் மூலம் இது குறித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எங்களின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் கதை திரைக்கதை இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளிவந்த ’கைதி’ திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்பந்தமாக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டு வருகின்றனர். எங்களுக்கு இந்த வழக்கு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரியாத காரணத்தினால் அதை பற்றி விவரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது

அதேசமயம் ’கைதி’ சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளையும், எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் நாங்கள் உறுதியாக மறுக்கவோ சட்டப்படி இதை நிரூபிக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல் ’கைதி’ திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.