வெறும் ரூ.76 ஆயிரம்: விஜய் வாழ்ந்த வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் தற்போது ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வரும் நிலையில் வெறும் ரூ.76,000 தரவில்லை என்பதற்காக அவர் வசித்த வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் ’சட்டப்படி குற்றம்’. இந்த படத்தை விளம்பரம் செய்வதற்காக சரவணன் என்பவருடன் எஸ்ஏசி ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி விளம்பரத்திற்கான பணத்தை அவர் தரவில்லை என்றும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பணத்தை உடனே செலுத்த உத்தரவிட்டது. இருப்பினும் எஸ்.ஏ.சி பணத்தை செலுத்தவில்லை என்பதால் அவரது அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது எஸ்.ஏ.சியின் அலுவலகமாக இருக்கும் வீடுதான் விஜய் கடந்த சில ஆண்டுகளுக்கு வசித்த வீடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெறும் 76 ஆயிரம் ரூபாய் செலுத்தவில்லை என்பதற்காக விஜய் வசித்த வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்திக்கு உள்ளாகும் நிலையை எஸ்.ஏசி ஏற்படுத்தியது ஏன் என்று ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.