பார்கவுன்சிலுக்கே சாயம் பூசிய இளம்பெண்… சட்டம் படிக்காமல் ஏமாற்றியது அம்பலம்!

  • IndiaGlitz, [Friday,July 30 2021]

வக்கீல் தொழில் செய்பவர்களிடம் எதையும் மறைக்க முடியாது. தோண்டி துருவி உண்மையைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை பொதுவாக இருந்து வருகிறது. இந்நிலையில் கேரள நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் பார்கவுன்சிலை ஏமாற்றி, இளம்பெண் ஒருவர் பல வருடங்களாக வக்கீல் பணியாற்றி வந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் ஜெசி சேவியர். இவர் கடந்த 2 வருடமாக நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். அதோடு பார்கவுன்சிலில் முறையாக பதிவு செய்து இருக்கும் இவர், சமீபத்தில் அதற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தற்போது லைப்ரரியனாகவும் பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்நிலையில் நூலகத்தில் இருக்கும் முக்கிய ஆவணங்களை பதுக்கிக் கொண்டதாக இவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து கடந்த ஜுலை 5 வாக்கில் ஜெசி சட்டப்படிப்பே படிக்கவில்லை என்றுகூறி மொட்டைக் கடுதாசி ஒன்று வந்துள்ளது. இதனால் ஜெசி குறித்து விசாரித்தபோது அவர் சட்டமே பயிலவில்லை என்றும் திருவனந்தப் புரத்தில் வக்கீலாக பணியாற்றி வரும் ஒருவரின் பதிவெண்ணை வைத்து பார்கவுன்சிலில் பதிவு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜெசி மீது காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்திற்கு வந்த ஜெசி ஜாமீன் கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தில் இருந்துத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் கேரள மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.