கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பிரபல யூடியூபர்… வலைவீசி தேடும் போலீஸ்!

  • IndiaGlitz, [Monday,September 27 2021]

“நாகை மீனவன்“ எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் குணசீலன். இவர் மீன்களை பிடிப்பது, அதை சமைப்பது உள்ளிட்ட வீடியோக்களை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவருக்குச் சொந்தமான படகில் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்றிருக்கிறார். இந்தத் தகவலை ஏற்கனவே அறிந்து கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலை தடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளைப் பார்த்த குணசீலன் உள்ளிட்ட அவருடைய நண்பர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நாகைத் துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கறைப் பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்றிரவு இதேபோல ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஒரு படகில் இருந்து 10 மூட்டைகளில் 280 எடையுள்ள கஞ்சா , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் பைக், 1 ஐஸ்பெட்டி, 2 வலை உள்ளிட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில் பிரபல யூடியூபர் குணசீலனுக்குச் சொந்தமான படகில்தான் இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேற இருந்ததும் தெரியவந்துள்ளது. அதேபோல கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டார் வாகனங்களில் 1 வாகனம் குணசீலனுக்குச் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தை அடுத்து யூடியூபர் குணசீலனைத் தேடும் பணியில் தற்போது போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.