உருவாகிறது 'சரவணா ஸ்டோர்' அருள் சரவணனின் மாபெரும் ரசிகர் மன்றம்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர்களில் ஒருவரான அருள் சரவணன் சமீபத்தில் படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. பட பூஜை கூட நடந்தது. இந்நிலையில் அருள் சரவணனின் ரசிகர் மன்றத்தில் சேர அழைப்பு விடுத்து சென்னை முழுக்க போஸ்டர்கள் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். இந்நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் தமிழ் நடிகைகள் நடித்தனர். பிறகு அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சரவணா அருள், தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அவரின் நடிப்பை பலரும் கேலி, கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அருள் தொடர்ந்து தனது கடை விளம்பரத்தில் நடித்து வருகிறார். இப்படி விளம்பரத்தில் மட்டும் நடித்து வந்த அருள், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.சரவணா அருள் தயாரித்து, நடிக்கும் இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சரவணனுக்கு ஜோடியாக, மாடல் நாயகி கீத்திகா திவாரி நடிக்கவுள்ளார்.

தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 1 என்று பெயரிட்டுள்ள இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில் இயக்குநர் எஸ்.பி முத்துராமன், பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா ஆகியோர் கலந்து கொண்டனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.