பசுமாடு வேலி தாண்டியதால்… காலை துண்டாக வெட்டியக் கொடூரச் சம்பவம்!!!

  • IndiaGlitz, [Tuesday,January 12 2021]

மழைப் பருவம் என்பதால் தற்போது தஞ்சை பகுதியில் பயிர் சாகுபடி சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் வேலி தாண்டி வயல் பகுதியில் தவறுதலாக மேய்ந்து விட்ட ஒரு காளை மாட்டின் காலை அந்த வயலின் உரிமையாளர் துண்டாக வெட்டி உள்ளார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட பலரும் இப்படியுமா? ஈவு, இரக்கம் இல்லாமல் செய்வது என வெதும்பி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பள்ளியக்ஹாரம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் ஆனந்த் என்பவருக்கு சொந்தமாக 2 காளை மாடுகள் இருக்கின்றன. இந்த மாட்டில் ஒரு காளை மாடு தவறுதலாக மந்திரி என்பவரின் வயல் வெளியில் மேய்ந்து இருக்கிறது. இதையடுத்து இந்த மாடு எப்படி எங்கள் தோட்டத்தில் மேயலாம் என ஆத்திரப்பட்ட மந்திரியின் மைத்துனர் காமராஜ் அரிவாளை கொண்டு காளை மாட்டின் காலை துண்டாக வெட்டி இருக்கிறார்.

இதனால் கால் எலும்பு முறிந்து போன அந்த காளை மாடு தோட்டத்திலேயே சரிந்து விழுந்து இருக்கிறது. இதையடுத்து தகவல் அறிந்து அந்த இடத்திற்குச் சென்ற ஆனந்த் தன்னுடைய காளை மாட்டை பார்த்து கதறி அழுது இருக்கிறார். பின்பு மருத்துவர்களை அழைத்து அந்த காளை மாட்டிற்கு சிகிச்சையும் அளித்து இருக்கிறார். ஆனால் கடுமையான எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்ட அந்த காளை மாட்டை சரிசெய்ய முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தை அடுத்து துக்கம் தாங்காத ஆனந்த் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.