close
Choose your channels

கொரோனா விதிமுறைகளை மதிக்காத திருமணம்… ரூ.1 லட்சம் அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!

Friday, April 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நேற்று 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக வந்த தகவலை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனால் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத அந்த திருமண மண்டபத்திற்கு ரூ.90 ஆயிரமும் திருமணத்தை நடத்திய தம்பதிகளுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. அதோடு கடந்த 26 ஆம் தேதி முதல் திருமண நிகழ்வுகளில் 50 பேர்களுக்கு மட்டுமே அனுமதி, பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடு, கோவில் விழாக்களுக்கு கட்டுப்பாடு எனப் பல்வேறு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த விதிமுறைகளை மீறினால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பது போன்ற பல்வேறு கடுமையான எச்சரிக்கையை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் திருமண விழாக்களில் விதிமுறைகளை மீறிப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தை அடுத்து திரிபுரா மாநிலத்தின் ஒரு மாவட்ட ஆட்சியர் நேரில் சோதனை மேற்கொண்டு திருமண தம்பதிகளையே கைது செய்த சம்பவமும் அரங்கேறியது. தற்போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறி நடக்கும் திருமண விழாக்களை கூர்ந்து கவனித்து உரிய நபர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள எம்.எஸ்.ஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விவகாரம் தொடர்பாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 17,897 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் ஒரேநாளில் 107 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.