உயிரை காப்பாற்றிய ரூ.20 ஆயிரம் அபராதம்: கோழிக்கோடு விமானத்தை தவறவிட்டவரின் அனுபவம்

துபாய் விமான நிலையத்தில் அபராதம் விதிக்கப்பட்டதால், அபராதம் கட்டச் சென்றதன் காரணமாக விபத்துக்குள்ளான கோழிக்கோடு விமானத்தை தவற விட்ட ஒருவரின் அனுபவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அபுதாபியில் வேலை செய்துவரும் அப்சல் என்பவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்தியா செல்வதற்கு டிக்கெட் எடுத்திருந்தார். இதனை அடுத்து ஆகஸ்ட் 7ஆம் தேதி 9 மணிக்கு விமானம் புறப்படும் என்று அவருக்கு கூறப்பட்டது. இதனால் அவர் ஆகஸ்ட் 6 ஆம் தேதியே சார்ஜா சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை துபாய் விமான நிலையம் சென்றார்.

அங்கு அனைத்து பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு சக நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்து அதன் பின்னர் விமானத்தில் ஏற சென்றபோது விமான அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் அவர் தங்கியதால் 20 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவரது கையில் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. இதனை அடுத்து தனது அலுவலக நண்பருக்கு போன் செய்து பணத்தை வரவழைத்து அபராதத் தொகை கட்டிவிட்டு அதன்பின் அவர் அவசர அவசரமாக விமானத்திற்கு செல்ல முயன்றபோது 5 நிமிடங்களுக்கு முன் விமானம் புறப்பட்டுவிட்ட தகவல் அவருக்குக் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்து மீண்டும் தனது அறைக்கு வந்து தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்த போது விமானம் விபத்துக்குள்ளான செய்தி அவருக்கு தெரிந்தது. 5 நிமிடம் தாமதம் காரணமாக அவர் விமானத்தை தவறவிட்டதால் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்வதில் இருந்து தப்பித்துள்ளார் என்ற தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது.