ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் வரும் ஏப்ரம் 12-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவும் தற்போது வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாஜகவின் தேர்தல் குழு தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தின் ஆர்.கே.நகர் உள்பட நாடு முழுவதும் நடைபெறவுள்ள 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன்படி ஆர்.கே.நகர் வேட்பாளராக பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் பாஜகவின் சார்பில் போட்டியிடுகிறார்

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பாஜகவில் இணைந்த கங்கை அமரனுக்கு ஏற்கனவே கலைப் பிரிவு புரவலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தன்னை வேட்பாளராக அறிவித்த கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்த கங்கை அமரன், தமிழகத்தில் தற்போது அரசியல் குழப்பமான சூழல் இருப்பதால் ஆர்.கே.நகர் மக்கள் தன்னை கண்டிப்பாக வெற்றி பெற செய்வார்கள் என்று தான் நம்புவதாக தெரிவித்தார். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், தேமுதிக சார்பில் மதிவாணன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.