10 ரூபாய் டாக்டர் மறைவு....! ஊரே சேர்ந்து செய்த இறுதிச்சடங்கு...!

  • IndiaGlitz, [Saturday,April 10 2021]

பழைய வண்ணாரப்பேட்டையில் 10 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்து வந்த மருத்துவர் கோபாலன் உடல்நலக்குறைப்பாடு உயிரிழந்தார்.

10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த கோபாலன்(76) திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் மருத்துவராக வேலை பார்த்தவர்,வடசென்னை, வண்ணாரப்பேட்டையில் செட்டிலாகி விட்டார். பாலமுதலி தெருவில் தான் இவர் கிளினிக் வைத்து மக்களுக்கு அரும்பெரும் சேவை செய்து வந்தார். 1966-இல் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். பின் சென்னை எய்ம்ஸ் கல்லூரியில் உயர்கல்வியை படித்து அறுவை சிகிச்சை நிபுணரானார். அடுத்து ராஜீவகாந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றினார். இதன்பின் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்த இவர் கடந்த 2002-இல் ஓய்வு பெற்றார்.

மருத்துவச்சேவை:

வண்ணாரப்பேட்டையில் 1969-இல் ஒரு கிளினிக் துவங்கி, 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பின் 1976- முதல் 5 ரூபாயாக கட்டணத்தை உயர்த்தியுள்ளார். சில்லறை தட்டுப்பாடு காரணமாக அங்கு வரும் நோயாளிகளே 10 ரூபாய் கொடுத்து மருத்துவம் பார்த்து சென்றுள்ளனர். இதனால் வடசென்னை மக்களால் 10 ரூபாய் டாக்டர் என அன்போடு அழைக்கப்படுகிறார்.

இக்கட்டான சூழலான கொரோனா காலத்திலும் பெரிய மருத்துவமனைகள் மூடப்பட்ட நிலையில், இவர் அந்த சமயத்திலும் மக்களுக்கு உதவும் நோக்கில் வைத்தியம் பார்த்து வந்துள்ளார். மனைவியை இழந்த இவர், குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நிலைக்குறைபாடு காரணமாகவே அவர் நேற்று மாலையளவில் உயிரிழந்துள்ளார்.

கலங்கி நிற்கும் மக்கள்:

இவரை பற்றி வடசென்னை மக்கள் கூறியிருப்பதாவது,
தேவையில்லாத மருந்துகளை எழுதாமல், நோயாளிக்கு தேவைப்படும் மருந்துகளை மட்டும் எழுதித் தருவார். காக்கி சட்டை அணிந்த ஆட்டோ டிரைவர்கள் மருத்துவம் பார்க்க வந்தால், அந்த 10 ரூபாயை கூட அவர்களிடத்தில் வாங்க மாட்டார். தன்னுடைய எளிமையான மருத்துவ முறையில், ஆபத்தாக இருக்கும் நோயாளியை கூட காப்பாற்றி விடுவார். எந்த வியாதி வந்தாலும், 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து சரிசெய்து விடுவார். இவரின் இறப்பு எங்களுக்கு பேரிழப்பு என கூறி கண்ணீர் வடிக்கிறார்கள் வடசென்னை மக்கள். இவருக்கு உறவுகள் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி இறுதிச்சடங்குகளை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.