திருமண மண்டபத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மாப்பிள்ளை: மணமகள் ஆச்சரியம்

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு மாப்பிள்ளையும் அவரது வீட்டார்களும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நிரூப் என்ற தொழில் அதிபருக்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமேடையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் மணமகன் உள்பட மணமகன் வீட்டார் யாரும் வராதது பெரும் பதட்டத்தை அளித்தது.

இந்த நிலையில் திடீரென ஹெலிகாப்டர் வரும் சத்தம் கேட்டதும் உடனடியாக மணமகள் உள்பட அந்த பகுதியில் உள்ள அனைவரும் அண்ணாந்து பார்த்தபோது ஹெலிகாப்டரில் இருந்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தார்கள் வந்திறங்கியதை மணமகள் உள்பட அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

திருமணத்திற்கு வரும் போது வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அதனால்தான் ஹெலிகாப்டரில் வந்ததாகவும் மணமகன் கூறினார். பெங்களூரிலிருந்து திருமணம் நடைபெறும் கிராமத்திற்கு ஹெலிகாப்டரில் வர அவர் 2.4 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.