ரஜினிக்கு தமிழகம் நன்றி செலுத்த வேண்டும்: குருமூர்த்தி

  • IndiaGlitz, [Tuesday,January 21 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது தான் உண்மையைத்தான் பேசியதாக ரஜினிகாந்த் சற்று முன்னர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ரஜினியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடுதான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதை ரஜினி வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ரஜினி மீது குற்றஞ்சாட்டியவர்களில் ஒருவரான கொளத்தூர் மணி அவர்கள் இது குறித்து கூறிய போது ’ரஜினி துக்ளக் ஏட்டை காண்பித்திருக்க வேண்டுமே தவிர ஏதோ ஜெராக்ஸை காட்டக் கூடாது, தான் நாணயமானவன் என்பதை நிரூபிக்க ரஜினி துக்ளக் ஏட்டை காண்பிக்க வேண்டும். மேலும் ஹெச். ராஜா எஸ்வி சேகர் வரிசையில் ரஜினியும் மன்னிப்பு கேட்க மாட்டார். எனவே அதற்கான எதிர் நடவடிக்கைகளை நாம் பார்க்கலாம் என்றும் ரஜினி இப்படி நடந்துகொள்வது கேவலமான ஒன்றாக தான் நாங்கள் பார்க்கிறோம் என்றும் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

ரஜினியின் இன்றைய பேட்டி கொடுத்து குருமூர்த்தி மற்றும் கொளத்தூர் மணி ஆகிய இருவரும் கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.