close
Choose your channels

தோனி மீது பரபரப்பு புகார் கூறிய முக்கிய வீரர்… திடீர் பல்டியடித்த சம்பவம்!

Monday, January 3, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நான் இந்திய அணியில் இடம்பெறாததற்கு முன்னாள் கேப்டன் தோனியும் ஒரு காரணமாக இருந்தார், பிசிசிஐ அவருக்கு மட்டும் அதிக ஆதரவு அளித்துவந்தது என்பதுபோன்ற குற்றச்சாட்டை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்து இருந்தார். தற்போது அந்தக் கருத்திற்கு மாறாக தோனியைப் புகழ்ந்து பேசியிருப்பது பலரது மத்தியில் குழப்பதை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்துவந்த ஹர்பஜன் சிங் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு போட்டியில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தலாக விளையாடியுள்ளார். ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 2016 டி20 உலகக்கோப்பை போட்டி அணியில் இவர் இடம்பெற்றிருந்தும் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து மும்பை ஐபிஎல் போட்டிகளுக்காக விளையாடி வந்த இவர் கடந்த 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் கடந்த வாரம் அனைத்துவிதக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தொடர்ந்து அவர் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஹர்பஜன் சிங் நான் இந்திய அணியில் இடம்பெறாததற்கு என்ன காரணம் என்று கேப்டன் தோனியிடம் கருத்துக் கேட்டேன். ஆனால் அவர் எந்தப் பதிலும் கூறவில்லை. தொடர்ந்து பதிலை எதிர்ப்பார்த்துவந்த எனக்கு ஒரு கட்டத்தில் கடும் வருத்தம் ஏற்பட்டது.

மேலும் இந்திய அணியில் இடம்பெறாததற்கு தோனியும் காரணமாக இருக்கலாம். பிசிசிஐ தோனிக்கு அதிக ஆதரவு அளித்தது எனக் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரசிகர்கள் பரபரப்பை எழுப்பி வந்தனர். அதில் தோனிக்கு ஒருவேளை ஹர்பஜன் சிங் மீது கோபம் இருந்தால் ஏன் சிஎஸ்கே அணியில் அவரைத் தேர்வு செய்யவேண்டும். அதேபோல தோனி மீது உங்களுக்கு கோபம் இருந்தால் சிஎஸ்கே அணியில் விளையாடாமல் இருந்திருக்கலாமே? என்று அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இத்தகைய விமர்சனங்களை தொடர்ந்து ஹர்பஜன் சிங் தற்போது வீரர்களுக்கு ஆதரவு தந்து ஊக்கம் அளிப்பதில் தோனி தான் சிறந்தவர். அந்த விதத்தில் தோனி சிறந்த கேப்டனாக விளங்கியதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஏன் திடீர் பல்டி அடித்துவிட்டீர்கள் என்று ரசிகர்கள் ஹர்பஜன் சிங்கை கிண்டலடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.