அகமதாபாத் அணி எடுத்த திடீர் முடிவு… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் போட்டிகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 12, 13 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் இரண்டு அணிகளும் தங்களுக்கான வீரர்களைத் தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அகமதாபாத் அணி எடுத்திருத்திருக்கும் சில முக்கிய முடிவுகள் ரசிகர்கள் மத்தியில் கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை புதிய அணிகள் இரண்டும் தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியிருந்தது. மேலும் அணியை வழிநடத்துவதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்பதுபோன்ற தகவலும் வெளியாகி இருந்தது. ஆனால் திடீரென ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

காரணம் ஹர்திக் பாண்டியா குஜராத் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் உள்ளூர்காரரை நியமிப்பதன் மூலம் அணியை எளிதாக விளம்பரப்படுத்த முடியும் என்று நிர்வாகம் முடிவெடுத்து இருந்தது. இந்நிலையில் உடற்தகுதியே இல்லாத ஹர்திக் பாண்டியாவை ஏன் அகமதாபாத் அணி தேர்வு செய்தது என்பது போன்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் போட்டிகளில் நீண்டகாலமாகவே விளையாடி வருகிறார். 5 முறை சாம்பியன் ஷிப் பட்டம்வென்ற மும்பை அணியில் இவர் விளையாடிய அனுபவம் பெற்றவர். இதனால் மும்பை அணிக்கு எதிரான வியூகத்தை எளிதாக இவரால் வகுக்க முடியும். அதோடு சிஎஸ்கே கேப்டன் தோனியோடு ஹர்திக் நெருங்கி பழகக்கூடியவர் இதனால் சிஎஸ்கே-வை கணிப்பதற்கும் ஹர்திக் பாண்டியாவால் முடியும்.

கூடவே சிறந்த பினிஷராக இருக்கும் ஹர்திக் பாண்டியா அணியின் வெற்றிக்கு உதவுவார். மேலும் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் போன்ற மற்ற கேப்டன்களின் ஆட்டத்தையும் இவரால் கணிக்க முடியும் என்ற அடுக்கடுக்கான காரணங்களைத் தொடர்ந்து அகமதாபாத் அணி நிர்வாகம் தற்போது ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்திருக்கிறது.

இதனால் ஹர்திக் பாண்டியாவை ரூ.16 கோடிக்கு தக்கவைத்துக் கொண்ட அந்த அணி தொடர்ந்து ரஷித்கானை 16 கோடிக்கு தக்கவைத்துள்ளது. மேலும் இஷான் கிஷனை அணியில் தக்க வைக்க முயன்ற அந்த அணி தற்போது சுப்மன் கில்லை 7 கோடிக்கு தக்க வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அகமதாபாத்தின் இந்த அதிரடி முடிவு ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.