கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் இளைஞரின் வெறிச்செயல்!

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

கல்லூரி மாணவி ஒருவர் அவர் படித்து வந்த கல்லூரி வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்ற பகுதியில் நிகிதா தோமர் என்ற இளம்பெண் வணிகவியல் இறுதி ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருவதால் நேற்று தேர்வு எழுத கல்லூரிக்குச் சென்ற நிகிதாவை திடீரென காரில் வந்த இரண்டு இளைஞர்கள் கடத்த முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நிகிதா முயற்சித்த கொண்டிருந்தபோது, திடீரென இளைஞர்களில் ஒருவர் துப்பாக்கியால் அந்த மாணவியை சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

துப்பாக்கி சூட்டின் காரணமாக ரத்த வெள்ளத்தில் மிதந்த நிகிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொலை செய்த இளைஞருக்கும், நிகிதாவுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததாகவும் இருவரும் நட்புடன் பழகியதாகவும் தெரிய வந்தது.

மேலும் ஏற்கனவே ஒருமுறை நிகிதாவை அவர் கடத்த முயன்றதாகவும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் ஆனால் மாணவியின் தந்தை புகாரை திரும்ப பெற்றதால் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நிகிதாவை சுட்டுக் கொலை செய்த இளைஞர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடும் முயற்சியில் உள்ளனர்.