close
Choose your channels

அந்தப்பெண் கள்ளத்தொடர்பில் இருந்தார்…  ஹத்ராஸ் பாலியல் சம்பவம் குறித்து பாஜக பிரமுகரின் சர்ச்சை கருத்து!!!

Thursday, October 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அந்தப்பெண் கள்ளத்தொடர்பில் இருந்தார்…  ஹத்ராஸ் பாலியல் சம்பவம் குறித்து பாஜக பிரமுகரின் சர்ச்சை கருத்து!!!

 

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி விறகு சேகரிக்க சென்ற 19 வயது இளம்பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை செய்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த இளம்பெண்ணுக்கு நடந்தது பாலியல் வன்கொடுமையே இல்லை என்பது போன்ற கருத்துகளை முதலில் சிலர் கூறிவந்தனர். அடுத்து குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளைத் கூறத் தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து உண்மைச் சம்பவத்தை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசை தொடர்ந்து காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அம்மாநில முதல்வர் சிபிஐ உதவியை நாடியதோடு உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின்கீழ் விசாரணை நடைபெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி தற்போது ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

ஆனால் இந்த வழக்கில் சாதி, அரசியல் அழுத்தங்கள் இருப்பதாகப் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் நால்வரும் உயர்வகுப்பை சார்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினப் பெண் என்பதால் இதில் அரசியல் மற்றும் சாதி அழுத்தங்கள் இருக்கிறது என்பதைப் போன்ற கருத்துகள் பொதுவெளியில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவத்தை குறித்து பாஜக பிரமுகர்கள் சிலர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்துவது மேலும் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலம் பால்யா தொகுதியில் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், “அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற (பாலியல் வன்கொடுமை) குற்றச் செயல்களை தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும் சடங்குகளையும் நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையைத் தடுக்க முடியும்” எனச் சர்ச்சை ஏற்படுத்தும் கருத்தைக் கூறியிருந்தார். இவரது கருத்துக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட சினிமா நட்சத்திரங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

அவரைத் தொடர்ந்து தற்போது மற்றொரு பாஜக தலைவர் ஒருவரும் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ரஞ்சி பகதூர் ஸ்ரீவஸ்தவா, இவர் மீது 44 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவனுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறியிருக்கிறார்.

“பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் தான் ஆண் நபரை (கற்பழிப்பு குற்றவாளிகளில் ஒருவன்) வயல்வெளிக்கு அழைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அந்த இளம்பெண்ணுடன் ஆண் நபருக்கு (குற்றவாளி) கள்ளத்தொடர்பு உறவு இருந்துள்ளது. இந்த செய்தி ஏற்கனவே சமூக வலைத்தளங்களிலும் செய்தி சேனல்களிலும் வெளியாகி உள்ளது. அதன்பின் அந்த பெண் பிடிபட்டிருக்க வேண்டும்.

இதுபோன்ற பெண்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப் படுகின்றனர். அவர்கள் கரும்பு தோட்டங்களிலும் சோளம், தினை வயல்களிலும், புதர்கள், பள்ளங்கள் அல்லது காடுகளில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப் படுகின்றனர். அவர்கள் ஏன் நெல் அல்லது கோதுமை வயல்களில் உயிரிழந்து கிடப்பதில்லை?

கரும்பு, சோளம், தினை போன்ற பயிர்கள் உயரமாக இருக்கும். அவற்றால் ஒரு நபரை மறைக்க முடியும். ஆனால் கோதுமை மற்றும் நெல் பயிர்கள் நான்கு அடி உயரம் வரை மட்டுமே வளரும்.

குற்றம்சாட்டப்பட்ட ஆண் நபரில் ஒருவருடன் இளம்பெண் கள்ளத்தொடர்பில் இருந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்து அவர்களை அந்த இளம்பெண்ணை கொன்றிருக்கலாம். இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது என்பதை உறுதிப்படுத்த நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட இளைஞர்கள் கடத்தி சென்றதற்கான நேரடி ஆதாரங்களும் இல்லை.

இதனால் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என நான் உறுதியாக கூறுகிறேன். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் தொடர்ச்சியாக அவர்கள் மன ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி விடுவார்கள். இழந்த இளைஞர்களை யார் திருப்பி தருவார்கள்? அரசாங்கம் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்குமா?

இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் வரை குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்” என அவர் கூறியிருக்கிறார். இந்தக் கருத்து தற்போது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருப்பதோடு, ஏன் இந்த வழக்கு குறித்து கருத்துக்கூறும் பாஜக பிரமுகர்கள் அனைவரும் குற்றமே நடக்கவில்லை என்பது போன்ற கருத்துகளைத் திரும்ப திரும்ப வெளிப்படுத்தி வருகின்றனர் என்ற கேள்வியையும் முன்வைத்து இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.