ஆக்சிஜன் பற்றாக்குறை… மீண்டும் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த அவலம்!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

டெல்லி, செங்கல்பட்டு, மும்பை, கர்நாடகா எனத் தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது. அதேபோல தற்போது ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி நகரில் இருக்கும் ரூயா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு வரவேண்டிய ஆக்சிஜன் சப்ளை லாரி நேற்று தாமதமாக வந்ததாகவும் இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தக் காட்சிகளை வெளியே இருந்து பார்த்த அவர்களின் உறவினர்கள் உள்ளே வந்து நோயாளிகளுக்கு பேப்பர்களை வைத்து விசிறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் இல்லாமல் தவித்த 15 நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உடனடியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.