பெரியார் சிலை விவகாரம்: முழு பூசணிக்காயை மறைக்கும் எச்.ராஜா

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

நேற்று காலை பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை போல் தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அவரது கட்சியிலேயே அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. இதனால் எச்.ராஜா அந்த சர்ச்சைக்குரிய பதிவை சிலமணி நேரங்களில் நீக்கிவிட்டார். இருப்பினும் இந்த நிமிடம் வரை சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிரான விமர்சனங்கள்ல் பதிவாகி வருகிறது

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பெரியார் சிலை குறித்த பதிவை தான் பதிவு செய்யவில்லை என்றும், தன்னுடைய அட்மின் தன்னுடைய அனுமதியின்றி பதிவு செய்ததாகவும் கூறியுள்ள எச்.ராஜா, இதுகுறித்து யார் மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நேற்றைய தினம் திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.

கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல. ஆகவே ஆக்கபூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இனைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு எச்.ராஜா தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

எச்.ராஜா வருத்தம் தெரிவித்திருந்தபோதிலும், அவருக்கு தெரியாமல் இந்த சர்ச்சைக்குரிய பதிவு வெளிவர வாய்ப்பு இல்லை என்றும், அவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலை செய்து வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் இந்த பதிவு அவருக்கு தெரிந்து வந்ததோ, தெரியாமல் வந்ததோ, வருத்தம் கேட்டுவிட்டதால் இந்த பிரச்சனை இத்துடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.