மனைவி சந்தேகப்படுறாங்க.. கூகுள் மேப் மீது போலீசில் புகார் அளித்த கணவர்

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

தான் செல்லாத இடங்களையெல்லாம் கூகுள் மேப் காண்பிப்பதாகவும், அதனால் தனது மனைவி சந்தேகப்படுவதாகவும் இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூகுள் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் ஒருவர் போலீஸ் புகார் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மயிலாடுதுறையில் உள்ள லால்பகதூர் என்ற பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி தினமும் அவர் வேலைக்கு சென்று வீடு திரும்பியதும் அவரது செல்போனை வாங்கி கூகுள் மேப்பில் உள்ள யுவர் டைம்லைன் என்ற பகுதியை பார்த்து தனது கணவர் இன்று எங்கெல்லாம் சென்றுள்ளார் என்பதை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்

இந்த நிலையில் சில சமயம் கூகுள் மேப் சந்திரசேகரன் போகாத இடங்களை எல்லாம் சென்று வந்ததாக கூகுள்மேப் காட்டி உள்ளது. இதனால் அவரது மனைவி கணவர் மீது சந்தேகம் அடைந்தார். கணவரும், கணவரின் குடும்பத்தினரும் மனநல மருத்துவர்களும் இதுகுறித்து அந்த பெண்ணுக்கு விளக்கம் கூறியும், அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து கணவரை சந்தேகப்பட்டு அவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்

இதனால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சந்திரசேகரன் உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையம் சென்று ’தான் செல்லாத இடங்களுக்கு எல்லாம் சென்று வருவதாக கூகுள் மேப் காட்டுவதால் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூகுள் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது