மீன் குளம்பு வைக்காத மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,February 17 2021]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் மீன் குளம்பு வைக்காமல் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டு இருந்த மனைவியை அவருடைய கணவனே கோடாரியால் வெட்டியச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படுகாயம் அடைந்த 53 வயது பெண் தற்போது மதுரை அரசு மருத்துமனைவியில் தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரைக்குடி அண்ணா நகரில் வசித்து வரும் பாண்டி 68. இவருடைய முதல் மனைவி இறந்த நிலையில் கண்ணகி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தீவிரக் குடிப்பழக்கம் கொண்ட இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு “குடிக்க காசு கொடுக்கவில்லை“ என்பதற்காக பெற்ற தாயையே கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கிற்காக சிறையில் இருந்த பாண்டி சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்.

ஜாமீனில் வெளியே வந்தும் பாண்டி தொடர்ந்து குடித்துவிட்டு, வீட்டில் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவும் குடித்து விட்டு வீடு திரும்பிய பாண்டி, தன்னுடைய மனைவி வீட்டிற்கு வெளியே இருந்த அம்மியில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து கடும் கோபம் அடைந்து உள்ளார். இதனால் மீன் குளம்பு வைக்கச் சொன்னால் செய்ய மாட்டியா? என அருகில் இருந்த கோடாரியால் மனைவி கண்ணகியை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த கண்ணகியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.