ஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை வெட்டிய கணவருக்கு நேர்ந்த விபரீதம்!

ஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு அதன்பின்னர் கணவன் எடுத்த முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாரியப்பன் என்பவர் புது வீடு கட்டிக் கொண்டிருந்தார். இது குறித்து அவர் ஜோதிடம் கேட்க சென்ற போது ஜோதிடர் அவருடைய மனைவியின் நடத்தை சரியில்லை என்பதால் வீடு கட்டுவதில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் நேராக பருத்திக் காட்டில் வேலை செய்து கொண்டிருந்த மனைவி காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயமடைந்த காளியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரியப்பனிடம் விசாரணை செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது மாரியப்பன் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

ஜோதிடரின் பேச்சை நம்பி மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றதோடு தானும் தற்கொலை செய்து கொண்ட நபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.