கண்ணெதிரே நின்ற கணவர்: இறந்த கணவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி

  • IndiaGlitz, [Sunday,August 09 2020]

கணவர் இறந்துவிட்டதாக கருதி அவரை புதைத்து விட்டு வீடு திரும்பிய மனைவிக்கு கணவர் கண் முன்னே வந்து நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் அருகே சாக்கேரி என்ற பகுதியில் அஹ்மது ஹாசன் என்பவர் தனது மனைவி நக்மாவுடன் ஆகஸ்டு 2ஆம் தேதி சிறு பிரச்சனைக்காக சண்டை போட்டுள்ளார். இதனால் கணவர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து கணவர் இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால் அவரது மனைவி மற்றும் கணவரின் சகோதரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்னர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி போலீசார் கண்டெடுத்த ஒரு உடலை நக்மா மற்றும் அவரது சகோதரர்களிடம் காண்பித்து அடையாளம் காட்டுமாறு கோரினர். அந்த உடல் கணவர் உடல்தானா என்ற சந்தேகம் நக்மாவுக்கு இருந்தாலும் அவரது இரண்டு சகோதரர்களும் அதை அஹ்மது ஹாசன் உடல்தான் என்பதை உறுதி செய்தனர்.

இதன்பின் நக்மாவிடம் போலீசார் உடலை ஒப்படைத்த பின்னர், சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கணவரை நல்லடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பிய நக்மாவுக்கு தன் கண்முன்னே கணவர் வீட்டில் நின்று கொண்டு இருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது தான் மனைவியுடன் கோபித்துக் கொண்டு ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்ததாகவும் அங்கு வேலை பார்த்து இரண்டு நாள் சம்பளத்தை வாங்கி விட்டு வீடு திரும்பி விட்டதாகவும் கூறினார். அப்போதுதான் அவருக்கு தெரிந்தது அவர் இறந்துவிட்டதாக கருதி சடங்குகள் செய்துள்ளனர் என்பது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். அப்படியானால் நக்மா குடும்பத்தினர் நல்லடக்கம் செய்த உடல் யாருடையது என்பது குறித்தும் தற்போது போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.