close
Choose your channels

இந்தியா மூன்று பெரிய ஆபத்துகளில் சிக்கி தவித்து வருகிறது!!! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கட்டுரை ஒன்றில் இந்தியா 3 ஆபத்துக்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் நிலவி வரும் சூழல் குறித்து மன்மோகன் சிங் தெரிவித்த கருத்துத் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“திட்டமிட்டு உருவாக்கப் பட்ட சமூகப் பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், பரவி வரும் தொற்று நோய் என்ற மும்முனை ஆபத்துக்களை இந்தியா ஒரே நேரத்தில் சந்தித்து வருகிறது.

சமூக விரோதிகளும், அரசியல் வாதிகளும் நாட்டில் மத வன்முறையை தூண்டி விடுகிறார்கள். பல்கலைக்கழக வளாகங்கள், பொது இடங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் வன்முறையின் கோர முகங்களைத் தற்போது பார்க்க முடிகிறது. இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களை இது நினைவுப் படுத்துகிறது.

மக்களை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்பு படைகள் தர்மத்தை கைவிட்டு விட்டன. நீதித்துறையும் ஜனநாயகத்தின் நான்காம் தூணாக கருதப்படும் பத்திரிகை துறையும் கூட மக்களை கைவிட்டு விட்டன. சமூக பதற்றம். நாடு முழுவதும் வேகமாக பரவி நாட்டின் ஆன்மாவையே அச்சுறுத்தி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகத்துக்கே முன்னுதாரணமான பொருளாதார வளர்ச்சியைக் கண்ட இந்தியா, தற்போது பொருளாதார சீரழிவை சந்தித்து வருகிறது. பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து இருக்கும் நிலையில் மத மோதல்கள் அதிகரித்து இருக்கின்றன. முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள் புதிய திட்டங்களை மேற்கொள்ள தயங்குகிறார்கள். மத மோதல்கள் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக ஒரு பாதுகாப்பு குழுவை உருவாக்க வேண்டும். பிரச்சனையை கையாளும் பொறுப்பை அக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். பிரதமர் மோடி, வெறும் வார்த்தைகளை மட்டும் உதிர்க்காமல், தனது செயல்பாடுகளால் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் அல்லது திருத்தி அமைக்க வேண்டும். நுகர்வு தேவையை அதிகரித்து பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் விதமாகச் சலுகைகளை அறிவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவித்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.