ஜப்பான் கப்பலில் சிக்கிய மகள்: பிரதமருக்கு தந்தை எழுதிய உருக்கமான கடிதம்

  • IndiaGlitz, [Saturday,February 22 2020]

சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் சென்ற கப்பலில் பயணம் செய்த பயணிகள் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறப்பட்டதால் அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த கப்பலில் சிக்கியுள்ள தனது மகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர உதவி செய்யும்படி அவருடைய தந்தை தினேஷ் தாக்கூர் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த டிசம்பர் 2019 முதல் டயமண்ட் இளவரசி குரூஸ் என்ற கப்பலில் என் மகள் சோனாலி தாக்கூர் பணிபுரிந்து வருகிறார். அந்த கப்பலில் உள்ள பயணிகள் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த கப்பல் ஜப்பானின் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. என் மகள் கொரோனா வைரஸ் நோயாளியாக கடந்த 15 நாட்களாக ஒரு சிறிய அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

எனவே தயவுசெய்து எங்கள் மகளை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர எங்களுக்கு உதவுங்கள் என நாங்கள் இந்திய அரசிடம் முறையிடுகிறோம். அந்த கப்பலில் இருக்கும் எனது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் உடனடியாக இந்திய அரசு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து எனது மகளை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.