close
Choose your channels

லதா மங்கேஷ்கரிடம் பிசிசிஐ பட்ட கடன் பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் நைட்டிங்கேல் என ரசிகர்களால் பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கரின் இறப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் கடும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவரைப் பற்றிய சில மறக்கமுடியாத அனுபவங்கள் சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் லதா மங்கேஷ்கர் பிசிசிஐ–க்கு செய்த ஒரு மறக்க முடியாத உதவி பற்றியும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டுவருகின்றனர். இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் கபில்தேவ் தலைமையில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக்கோப்பை வெல்கிறது. இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பிசிசிஐ இந்தியாவிற்குத் திரும்பும் வீரர்களை எப்படி வெறுங்கையோடு வரவேற்பது? அவர்களுக்கு பரிசுத் தொகையை அறிவிக்க வேண்டுமே எனத் தவித்து வந்துள்ளது.

இதுகுறித்து அப்போதைய பிசிசிஐ தலைவர் NKP சால்வே தனது நண்பர் சுனில் வால்சன் என்பவரிடம் கவலையோடு தெரிவித்து இருக்கிறார். வால்சன் இந்தத் தகவலை தனது நெருங்கிய நண்பரான லதா மங்கேஷ்கருக்குத் தெரிவித்து இருக்கிறார். அவ்வளவுதான் டெல்லி ஜவஹர்லால் நேரு கலையரங்கத்தில் பிரம்மாண்ட இசை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் மூலம் நிதி திரட்டப்பட்டு ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. லதா மங்கேஷ்கர் செய்த இந்த உதவிக்கு பிசிசிஐ நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

இதைத்தவிர மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகரான லதா மங்கேஷ்கருக்கு பிசிசிஐ இந்தியாவில் நடக்கும் அனைத்துச் சர்வதேசப் போட்டிகளுக்கும் மறக்காமல் 2 விஐபி டிக்கெட்டுகளை அனுப்பி வைத்துவிடுமாம். லதாவும் கடந்த 70-80 களில் மும்பையில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் நேரில் கலந்துகொண்டிருக்கிறார்.

இன்னும் ஒருபடி மேலாக லார்ட்ஜ் மைதானத்திற்கு அருகில் குடியிருந்த லதா மங்கேஷ்கர் சில விளையாட்டு வீரர்களை நேரில் அழைத்து விருந்தும் வைத்திருக்கிறாராம். இதுகுறித்து கருத்துப் பகிர்ந்துகொண்ட திலிப் வெங்சர்க்கர் கடந்த 1986இல் நான் அடித்த 3 ஆவது சதத்தை பாராட்டும் விதமாக லதாஜி என்னையும் என்னுடைய நண்பர்களையும் நேரில் அழைத்து வீட்டில் அவரே சமைத்து விருந்து வைத்தார் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல கடந்த 1979இல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்ற இந்திய வீரர்களுக்கு அவர் நேரடியாகப் பாராட்டுத் தெரிவித்து இருக்கிறார். இப்படி கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த லதாவும் அவருடைய சகோதரர் ஹீரதய்நாத் மங்கேஷ்கரும் மும்பை ப்ராபர்ன் மைதானத்தில் நடக்கும் அனைத்துப் போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டுள்ளனர்.

லதா மங்கேஷ்கருக்கு கிரிக்கெட்டின் மீது தீராக ஆர்வம் இருந்திருக்கிறது. அதனால்தான் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விளையாட்டு வீரர்களைப் பாராட்டி வந்திருக்கிறார். கூடவே பிசிசிஐக்கு நிகழ்ச்சி நடத்திக் கொடுத்து மிகப்பெரிய உதவியையும் செய்திருக்கிறார். இந்த அடிப்படையில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.