பழைய சோற்றில் இத்தனை நன்மைகளா??? சுகாதாரத் துறையே கொடுத்த சர்டிபிகேட்!!!

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

புளித்துப்போன பழையச் சோற்றைத் தற்போது தமிழக சுகாதாரத்துறையும் கொண்டாடி வருகிறது. காரணம் குடல் அழற்சி நோய் போன்ற முக்கிய நோய்களுக்கு இந்தப் பழைய சோற்றுக் கஞ்சிதான் தீர்வாக இருக்கிறது என்பதை மருத்துவர்கள் ஒரு ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உள்ளனர். இதனால் குடல் அழற்சி நோய்க்கு ஸ்டான்லி மருத்துவர்கள் தற்போது பழைய சோற்றையே பரிந்துரைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தின நாள் செய்த அரிசி சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அதை அடுத்த நாள் காலை சாப்பிடும்போது புளிப்பு ஏறி இருக்கும். அந்தப் புளிப்பில் நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் ஐ.பி.டி என்ற குடல் அழற்சி நோயால் ஏற்படும் பெருங்குடல் தொற்றில்லாத வீக்கம் மற்றும் புண்களை ஏற்படுத்தும் நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. கடந்த வருடங்களில் ஒன்று, இரண்டு என்ற கணக்கில் இருந்த இந்த குடல் வீக்க நோய் தற்போது 1 லட்சம் மக்களில் 45 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் பல சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.

இதுபோன்ற குடல் வீக்க நோய்களுக்கு பழையச் சோற்று கஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதை தற்போது மருத்துவர்கள் கண்டுபிடித்து உள்ளனர். பழையச் சோற்று கஞ்சியில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் மனித வயிற்றில் ஏற்படும் குடல் புண் வீக்கம் போன்ற அழற்சி நோய்களை எளிதில் குணமாக்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதை சோதனை மூலம் நிரூபிக்க தமிழக சுகாதாரத்துறை ரூ.2.70 கோடி ரூபாய் செலவில் 600 நோயாளிகளிடம் பரிசோதித்தும் பார்த்து இருக்கிறது.

அந்தப் பரிசோதனையில் குடல் அழற்சி நோயால் குறைந்து போன பாக்டீரியாக்களை பழைய சோற்றுக் கஞ்சி சமன் செய்து விடுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்திக்கும் வலு சேர்ப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இந்தப் பழையச் சோற்றில் இருப்பதால் உடல் வலிமை பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணத்தினால்தான் பழைய சோற்றை நம் தமிழகர் காலம் காலமாகப் பயன்படுத்தி வருகின்றனர் என தமிழகச் சுகாதாரத்துறை தற்போது ஆய்விற்கு எடுத்துக் கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த கருத்துகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை மேலும் 3 ஆண்டு ஆய்வுக்கு பரிந்துரைத்து உள்ளது. இந்நிலையில் குடல் அழற்சிநோய் எதனால் ஏற்படுகிறது என்பதைக் குறித்தும் மருத்துவர்கள் கருத்து வெளியிட்டு உள்ளனர். இது பெரும்பாலும் பரம்பரை நோயாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் சுகாதாரமற்ற உணவு வகை மற்றும் அதிக மன அழுத்தம் போன்ற காரணங்களினால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை குறைந்து குடல் அழற்சி நோய் வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இத்தகைய நோய்களில் சிக்காமல் இருக்க பழையக் கஞ்சி சோற்றை சேர்த்து கொள்வது நலம் என்று தற்போது தமிழக சுகாதாரத்துறையே பரிந்துரை செய்து வருகிறது.