ரஜினிக்கே இப்படி என்றால் மற்றவர்களுக்கு எப்படி? ஐசரிகணேஷ் குற்றச்சாட்டு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் சரியான வகையில் அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியுடன் தபால் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தபால் வாக்குப்படிவம் நேற்று மாலை 6.45 மணிக்குத்தான் போய் சேர்ந்துள்ளது. அதனால் ரஜினி இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வருத்தத்தை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாதது, எங்கள் அணிக்கு பெரிய ஏமாற்றம் என்று கூறிய சுவாமி சங்கரதாஸ் அணியின் பொதுச்செயலாளர் வேட்பாளர் ஐசரி கணேஷ், 'ரஜினிக்கே தபால் வாக்கு சரியான நேரத்தில் சென்றடையாதபோது, மற்றவர்களுக்கு எப்படி சென்று சேரும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் நாசர், 'ரஜினிக்கு தபால்வாக்கு காலம் தாழ்ந்து சென்றதற்கு வருத்தப்படுவதாகவும், கால தாமதத்திற்கான காரணம் அவருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், சட்டப்படி தேர்தல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.