இன்று ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதுமா?

கொரோனா வைரஸ் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து இன்று காலை 7 மணிமுதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இந்தியா முழுவதும் பேருந்துகள், ரயில்கள் ஓடவில்லை. அதேபோல் ஆட்டோக்கள் கால் டாக்சிகள் பட அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரை சென்னை அண்ணாசாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடக்கிறது. ஒரு சிலர் மட்டும் சாலைகளில் நடந்து சென்று வெறிச்சோடிய சாலைகளில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து பால் மற்றும் மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் இந்த சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்துவிட்டு, நாளை முதல் மீண்டும் வழக்கம் போல் வெளியே வந்து தங்கள் வேலையை செய்தால் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது என்றும் இன்னும் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் தாமாகவே முன்வந்து அமல்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.