'வடசென்னை' படத்துல நான் நடிச்சிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்: காக்கா முட்டை நடிகரின் பேட்டி!

  • IndiaGlitz, [Thursday,July 01 2021]

’காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்த இரண்டு குழந்தை நட்சத்திரங்களான விக்னேஷ், ரமேஷ் தற்போது வாலிபர்கள் ஆகியுள்ள நிலையில் அவர்கள் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தங்களுடைய திரையுலக அனுபவங்களை தெரிவித்துள்ளனர்.

’காக்கா முட்டை’ திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் குழந்தைகளாக நடித்த சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் ’காக்கா முட்டை’ படத்திற்கு பின் எங்களுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வாய்ப்புகளை தேடினால் தான் கிடைக்கும் என்பது அந்த வயதில் எங்களுக்கு தெரியாது. ஒருகட்டத்தில் அதனை புரிந்து கொண்ட பின் பல கம்பெனிகளில் நாங்கள் வாய்ப்பு கேட்ட போது ’சொல்லி அனுப்புகிறேன்’ என்று தான் கூறினார்களே தவிர எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்கள். மேலும் பல இயக்குனர்களிடம் நாங்கள் வாய்ப்பு கேட்ட போது காரணமே இல்லாமல் எங்களை நிராகரித்து விடுவார்கள் என்றும் காரணம் கூறியிருந்தாலாவது, அது எங்களுக்கு ஒரு ஆறுதலாக இருந்திருக்கும், எங்களை நாங்கள் திருத்தி கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் என்றும் இருவரும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

மேலும் இப்பொழுதும் வெற்றிமாறன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்றும், எங்களுக்கு ஏதாவது தேவை என்றால் இருவருமே கண்டிப்பாக உதவி செய்வார்கள் என்றும் கூறினார்கள். மேலும் ’வடசென்னை’ திரைப்படத்தில் ’சரண்சக்தி ஒரு கேரக்டர் செய்திருப்பார், அந்த கேரக்டரை நான் செய்திருந்தால் வேற லெவலில் செய்து இருப்பேன் என்றும் ஏனெனில் நான் வடசென்னையில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் அந்த கேரக்டரில் நான் ஒன்றிருப்பேன் என்றும் விக்னேஷ் கூறினார். அந்த கேரக்டரில் சக்தி சரண் நன்றாக தான் நடித்து இருந்தார் ஆனாலும் அந்த கேரக்டர் எனக்கு கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பேன்’ என்றும் அவர் தெரிவித்தார்.,