கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 'பிகில்' தயாரிப்பு நிறுவனம் கொடுத்த தொகை

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து ரூபாய் 15 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதி உதவி செய்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பெப்சி தொழிலாளர்களை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தினர் தற்போது கொரோனா தடுப்பு நிவாரண நிதியாகவும் ஒரு பெரிய தொகையை அளித்துள்ளனர். இதன்படி தமிழக முதல்வரின் நிவாரண நிதி மற்றும் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் ஏஜிஎஸ் நிறுவனத்தினர் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வரின் நிவாரண நிதியாக சமீபத்தில் தல அஜித் ரூ.50 லட்சம் கொடுத்த நிலையில் அதற்கு நன்றி கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரையுலகை சேர்ந்த பலரும் தாராளமாக நிதி கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வகையில் தற்போது ஏஜிஎஸ் நிறுவனமும் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.